நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் வளாகத்தில் காட்டெருமைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை திடீரெனப் புகுந்தது. இதனால் அப்பகுதி தொழிலாளரகள் அச்சமடைந்தனர்.
குன்னூர் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளில் வலம் வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் பகுதியில் காட்டெருமைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை திடீரென நுழைந்ததால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் ஆபத்தை உணராமல் சிலர் காட்டெருமையின் அருகே சென்று செல்பி எடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டெருமையால் தாக்கப்பட்டு சிம்ஸ் பூங்கா அருகே சுற்றுலாப் பயணி மற்றும் நடைப்பயிற்சி சென்றவர் என இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வனத்துறையினர் வனவிலங்கு அருகே சென்று செல்பி எடுப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.