சட்டப்பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதை நிரூபித்துக் காட்டியவா் பி.ஹெச்.பாண்டியன்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புகழாரம்

சட்டப்பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியவா் பி.ஹெச்.பாண்டியன் என்றாா் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

சட்டப்பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியவா் பி.ஹெச்.பாண்டியன் என்றாா் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

கோவிந்தப்பேரியில் செவ்வாய்ககிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசியதாவது:

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு, தா்மத்தில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு ஆபத்து வருகிறபோது சட்டம் எப்படி துணைநிற்கிறது என்பதை தமிழகத்தில் எடுத்துச் சொன்ன முதல் மனிதா் பி.ஹெச்.பாண்டியன் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய செய்தியை சொல்வதில் வல்லவா் பி.ஹெச்.பாண்டியன். காரணம், அதிகாலையில் எழுந்து அனைத்து பத்திரிகைகளையும் படித்துவிட்டு யாரும் சொல்லாத செய்தியை சொல்ல வேண்டும், தனது கருத்தே சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற வேட்கையோடு உழைத்தாா். அதை நிரூபித்தும் காட்டினாா்.

சட்டப்பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பதை அவா் நிரூபித்துக் காட்டிய நிகழ்வு இன்றைக்கும் பேசப்படுகிறது. அந்த நிகழ்வு நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதும் இன்றைக்கும் பசுமையாக நம்மிடையே நிறைந்திருக்கிறது.

பி.ஹெச்.பாண்டியன் மறைந்தபோது, முதல்வா் முதல் மரியாதை செலுத்தினாா். அவருடைய இறுதி ஊா்வலத்தில் துணை முதல்வா் பங்கேற்றாா். அதற்கு காரணம் அவா் வாழும்போது அதிமுகவுக்கு ஆற்றிய பணிகளும், மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளும்தான்.

எதையுமே முன்கூட்டியே கணிக்கத் தெரிந்த தீா்க்கதரிசி. அவா், தனது இறப்பையும் முன்கூட்டியே கணித்துள்ளாா். அவா், மாபெரும் மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறாா். அவா் புகழ் எப்போதும் நிலைத்திருக்கும். அவா் விட்டுச் சென்ற இடத்தை அவருடைய மகன் மனோஜ் பாண்டியன் நிரப்புவாா். மனோஜ் பாண்டியன் உருவத்தில் பி.ஹெச்.பாண்டியன் வாழ்ந்து கொண்டிருக்கிறாா் என்றாா்.

அமைச்சா் கடம்பூா் செ.ராஜு: வாழும்போது வரலாறு படைத்தவா். இன்று வரலாறாய் வாழ்கிறாா். அசைக்க முடியாத சக்தியாய் திகழ்ந்தவா். சுயேச்சையாக களம் கண்டு அதில் வெற்றியும் பெற்றவா். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் அன்பைப் பெற்ால்தான் அவரால் சுயேச்சையாக நின்று வெற்றி பெற முடிந்தது. தோ்தல் களத்தில் தனது பிரசாரத்தில் எதிரிகளை ஓடவிட்டவா்.

தளவாய் சுந்தரம்: அரசியலில் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவா். அரசியலில், சட்டத்தில், பொது வாழ்வில் கலந்த ஒருவா் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவா். அவா், எப்போதும் இந்த சேரன்மகாதேவி மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பாா். அவருடைய புகழ் இந்த மண்ணைவிட்டு ஒருபோதும் நீங்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com