விருதுநகர்: பெரியார் பற்றி ரஜினி தெரிவித்த கருத்துகளுக்கு வரும் எதிர்வினைகள் தொடர்பாக ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருப்பது பார்க்க சங்கடமாக இருக்கிறது என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விருதுநகரில் வியாழனன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் 1971-ஆம் ஆடு சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் ராமர், சீதை ஆகியோரது நிர்வாண படங்கள் கொண்டு வரப்பட்டது என்றுதான் கூறினார். ஆனால் அப்படங்களை பெரியார் செருப்பால் அடித்தார் என்று கூறவில்லை. கொண்டு வரவில்லை என்றால் கொண்டு வரவில்லை என்று திராவிடர் கழகத்தினர் கூறிவிட்டுப் போயிருக்கலாம். அதை விடுத்து ரஜினியின் கொடும்பாவி எரிப்பு, வீடு முற்றுகை ஆகிய செயல்களில் ஈடுபடுவது ஏன்? எதற்காக இந்த மிரட்டும் வேலை? ரஜினிக்கு ரசிகர்கள் இல்லையா? ரஜினிக்கு நிகழ்த்தப்படும் எதிர்வினைகளை கண்டு அவரது ரசிகர்கள் அமைதியாக இருப்பது சங்கடமாக இருக்கிறது.
பார்ப்பன ஆதிக்கம் ஒழிக என்று ஏன் கோஷம் போடுகிறார்கள்? அவர்கள் ரஜினியின் பேச்சை எதிர்க்கிறார்களா இல்லை பிராமண சமுதாயதை எதிர்கிறார்களா? ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி பிழைப்பு நடத்தும் வேலையைத்தான் திகவினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதைபோல் அவர்களால் மற்ற மதங்களின் கடவுள்கள் குறித்து செய்ய இயலுமா? ஆன்மீகவாதிகள் மீதான பழிவாங்கும் காரியமாகவே ரஜினிக்கு காட்டப்படும் எதிர்ப்பை பார்க்க முடிகிறது.
இதுபோல பெரும்பான்மை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தும் விதமாக பேசி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். வரும் தேர்தலில் அவர்களது அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் என்பதே என் கருத்து.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.