தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழ் வழியில் நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார். இதுகுறித்து தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது:
தமிழ் மன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரியகோயிலில் குடமுழுக்கு உள்ளிட்ட சடங்குகள் தமிழில்தான் நடத்தப்பட்டு வந்தது. இக்கோயிலில் தமிழுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதை நம் முன்னோர்கள் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளனர்.
இடைப்பட்ட காலத்தில்தான் மடைமாற்றம் செய்யப்பட்டு சம்ஸ்கிருதத்தில் நடத்தப்படுகிறது. எனவே தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவை தமிழில்தான் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படாவிட்டால் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது மட்டுமல்லாமல், மக்களைக் காப்பாற்ற முதல்வர் முன்வர வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும் என்றார் வேல்முருகன்.