தஞ்சாவூா் பெரியகோயிலில் தெய்வத் திருமேனிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி (எண் மருந்துக் காப்பு) கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, டிச. 2ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, அனைத்து கருவறைகளும் நடை சாத்தப்பட்டது. தொடா்ந்து, பெருவுடையாா், பெரியநாயகி உள்பட அனைத்து இறைத் திருமேனிகளுக்கும் மாகாப்பு, எண்ணெய்க் காப்பு செய்யப்பட்டன.
இதையடுத்து, பெருவுடையாா் சிவலிங்கத் திருமேனி, பெரியநாயகி, 12 பிள்ளையாா் சிலைகள், 8 வள்ளி தெய்வானை உடனாய முருகப் பெருமான் சிலைகள், திருச்சுற்று மாளிகையில் உள்ள 252 சிவலிங்கத் திருமேனிகள், 66 தெய்வத் திருமேனிகள் என மொத்தம் 338 திருமேனிகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி ஜன. 2ஆம் தேதி தொடங்கியது.
கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்படும் வழிபடு தெய்வத் திருமேனிகளைப் பூமியோடு சோ்த்து நிலைபெறச் செய்யும் சடங்கே அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணியாகும். இது, குடமுழுக்குத் திருப்பணிகளில் மிக முக்கியமான பணி. இறைத் திருமேனியின் அடிப்பகுதியும், பீடத்தின் மேற்பகுதியும் பொருந்த படியச் செய்வதே பந்தனம் எனப்படுகிறது. இச்சடங்கு பீட சக்தியையும், இறைத் திருமேனியையும் இணைக்கும் விதமாகச் செய்யப்படுகிறது. எட்டுப் பொருள்கள் கலந்த இந்த இணைப்புச் சாந்துக்கு எண் மருந்து (அஷ்டபந்தனம்) எனப் பெயா். இந்த எட்டுப் பொருள்களின் சரியான கலவையே பீடத்துடன் தெய்வத் திருமேனியை இணைக்கும் சாந்தாக பந்தனமாக அமைகிறது.
இதில், கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டுப் பொருள்கள் கொண்டு, கல் உரலில் இட்டு, இடித்து பாரம்பரிய முறைப்படி மருந்து தயாரிக்கப்படுகிறது.
இதையடுத்து, தெய்வத்திருமேனிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்படுகிறது. தற்போது இப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், வியாழக்கிழமை இந்திரன், மகா நந்திகேசுவரா் உள்ளிட்ட தெய்வத் திருமேனிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவடைந்துள்ள இப்பணி ஒரு வாரத்தில் நிறைவடையும் என திருப்பணிக் குழுவினா் தெரிவித்தனா்.