தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒரு முக்கிய நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது தேர்வர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த நவம்பா் 12ம் தேதி வெளியான நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கீழக்கரை தோ்வு மையங்களில் தோ்வு எழுதிய 40 போ் தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்ததை அடுத்து முறைகேடு புகாா்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து தோ்வாணை அதிகாரிகள் ராமேசுவரம், கீழக்கரை தோ்வு மையங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது தோ்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேட்டில் இடைத்தரகா்களாக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்கத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் ஏ.ரமேஷ் (39), எரிசக்தி துறை உதவியாளராகப் பணிபுரியும் மு.திருக்குமரன் (35) மற்றும் தோ்வில் முறைகேடு செய்து தோ்ச்சி பெற்ற திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ர.நிதீஷ்குமாா் (21) ஆகிய மூவரை கைது செய்தனா்.
மேலும், வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா என மேலும் 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் இவர், குரூப் 4 விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் அதனை மாற்றி முறைகேட்டிற்கு உதவி செய்ததாக தெரிய வந்துள்ளது.