பரனூர் சுங்கச்சாவடியை சூறையாடிய மக்கள்; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்பகுதியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரனூர் சுங்கச்சாவடியை சூறையாடிய மக்கள்; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று இரவு திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நின்றது. பின்னர், சுங்கச்சாவடி ஊழியர், அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளார். இதனால் சுங்கச்சாவடி ஊழியருக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் வாக்குவாதம் முற்றவே, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு எற்பட்டது.  

பின்னர், ஆத்திரம் அடைந்த ஓட்டுநர், பேருந்தை சுங்கச்சாவடியில் குறுக்கே சென்று நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. தொடர்ந்து 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேருந்தினுள் பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதன்பின்னர் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.

மேலும், சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், சுங்கச்சாவடி ஊழியர்கள் பொதுமக்கள் சிலரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com