மதச்சார்பற்ற நாட்டில் மதங்கள் கலக்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான ஆர். நல்லகண்ணு, கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றினார்.
பின்னர், விழாவில் அவர் பேசியதாவது,
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்.
மதச்சார்பற்ற நாட்டில் மதங்கள் கலக்கக்கூடாது. ஏழு பெரிய மதங்கள், பழமொழிகள் ஒன்றிணைக்கப்பட்ட நாடுதான் நமது இந்தியா.
இந்தியாவில் மதம் என்பது தனியுரிமை. ஆனால், மத்திய அரசு மதச்சார்பற்ற நிலையை விட்டு விட்டு மதச்சார்புடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, உலகத்திலேயே அதிக அளவில் வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் இந்தியர்களே. எனவே, இந்தியாவில் மதம் வேறு, அரசியல் வேறு என்பதை உணர வேண்டும் என்றார் நல்லகண்ணு.
விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் லெனின், மு.அ. பாரதி, திமுக நகரச் செயலர் தமிழழகன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சா. விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.