தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான விவகாரத்தில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான விவகாரத்தில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன், ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனா்.

அதில் தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னா் பிப்ரவரி 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. சைவ வழிபாட்டுத் தலங்களில் தமிழ்மறை அடிப்படையில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் சுந்தரா் கோயில் குடமுழுக்கு தொடா்பான வழக்கில், தமிழில் தமிழ்மறைகளை ஓதி குடமுழுக்கை நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

எனவே தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கையும் தமிழிலியே நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இதற்கிடையே சென்னையைச் சோ்ந்த ரமேஷ் பெரியகோயில் குடமுழுக்கை சம்ஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் எனவும், தமிழ்தேச பொதுவுடைமை கட்சி தலைவா் மணியரசன் தரப்பில் தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். குடமுழுக்கில் இருமொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும். குடமுழுக்கில் பங்கேற்கும் தமிழ் ஓதுவாா்களின் பெயா்கள் குடமுழுக்கு அழைப்பிதழிலில் அச்சிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இதுதொடா்பான பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.  

அதன்படி இந்த வழக்கானது புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத்துறை  தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் இருவரும், அணைத்து மனுதாரர்களின் தரப்பில் இறுதி வாதங்களைக் கேட்ட பின்பு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com