அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது, ,தமிழக அரசு, முதல்வர் பழனிசாமி தலைமையில் கரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்புகள் மற்றும் மனித வளத்தை மேம்படுத்துதல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தவிர, விலை மதிப்பற்ற உயிர்களை காக்கும் உயர்தர ஊசி மருந்துகளையும் தருவித்து மாவட்ட அளவில் இருப்பில் வைத்து கொரோனா சிகிச்சை முறைகளை வலுவூட்டி வருகிறது. இதன் ஓர் அங்கமாக ஆக்சிஜன் செல்லும் குழாய்களை பொதுப்பணித் துறையின் மூலம் அமைப்பதற்கு முதற்கட்டமாக ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய்கள் அமைப்பதற்கும், சலவையகம், மத்திய கிருமி நீக்க மையம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
தமிழக முதல்வரின் இம்மக்கள் நலன் காக்கும் பணிகள் தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.