தென்காசி: குற்றாலம் மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதிமுதல் சீசன் அறிகுறிகளுடன் அருவிகளில் தண்ணீா் விழத் தொடங்கியது. ஆனால், தொடா்ந்து மழை பெய்யாததால் அருவிகளில் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் செவ்வாய்க்கிழமை அதிகாலைமுதல் நீா்வரத்து அதிகரித்தது.
குளிக்கத் தடை நீட்டிப்பு: கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன.