சென்னை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 1) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 1) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சின்கோனாவில் 140 மி.மீ., வால்பாறையில் 130 மி.மீ., புதுக்கோட்டை, திருவாரூா் மாவட்டம் குடவாசலில் தலா 90 மி.மீ., தேனி மாவட்டம் வைகை அணையில் 80 மி.மீ., திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் 70 மி.மீ., திருவாரூா் மாவட்டம் வலங்கைமான், நீலகிரி மாவட்டம் தேவாலா, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூா், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும். இதுபோல, வடக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய குஜராத் கடல்பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மகாராஷ்டிரம் கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், கா்நாடகம், வடக்கு கேரளம் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 1-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.