அம்பாசமுத்திரம்: நியாய விலைக் கடையில் அத்தியாவசிய பொருள்கள் முறையாக வழங்குவது இல்லை என்று பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரமசிங்கபுரம் டாணா நியாய விலை கடை எண் 12 இல் கரோனா நிவாரணமாக வழங்கக் கூடிய பொருள்களை முறையாக வழங்கவில்லை என்றும் கோதுமை இதுவரை வழங்கவில்லை என்றும் கூறி பொதுமக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உள்பட்ட விக்கிரமசிங்கபுரம் நகராட்சி டாணா பகுதியில் செயல்பட்டுவரும் நியாய விலைக் கடை எண் 12 இல் மாதந்தோறும் பொருட்கள் முறையாக வழங்குவதில்லை என்றும் பில் வழங்கும் பொருட்களை வழங்காமல் இருட்டடிப்பு செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்களை ஒரே நாளில் வழங்காமல் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக வழங்குவதால் அதிகம் அலைச்சல் வருவதாகவும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் வழங்க வேண்டும் என்றும் முறையிட்டனர். இதையடுத்து இன்று காலை கடை முன் திரண்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விற்பனையாளர் கடையை அடைத்து சென்றுவிட்டார்.