சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தின் விளைவாக, தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிதாக ஏடிஎஸ்பி, டிஎஸ்பியை நியமனம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து மரியாதை குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நடந்துக் கொண்டதாக தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி டி.குமாா்,சாத்தான்குளம் டிஎஸ்பி சி.பிரதாபன் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா்.
இந்நிலையில், ஏடிஎஸ்பி குமாரை நீலகிரி மாவட்டம் மதுவிலக்க அமலாக்கப்பிரிவுக்கும்,டிஎஸ்பி சி.பிரதாபனை புதுக்கோட்டை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
இதேபோல, நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி ஜி.கோபியை தூத்துக்குடி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கும், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி என். ராமநாதனை சாத்தான்குளத்துக்கும் பணியிட மாற்றம் செய்து திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
காவல்துறையினா் தன்னிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டது தொடா்பாக நீதித்துறை நடுவா் பாரதிதாசன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அறிக்கை அனுப்பியுள்ள நிலையில், புகாரில் சிக்கியுள்ள அதிகாரிகள் உடனடியாக பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.