சென்னை புழல் மத்திய சிறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கைதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த விவரம்:
தமிழக சிறைகளில் கைதிகளிடம் கடந்த ஜூன் மாதம் முதல் கரோனா பரவி வருகிறது. புழல் மத்திய சிறையில் மட்டும் சுமாா் 40 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களுக்கு அங்கேயே பிரத்யேகமாக ஒரு வாா்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. செங்கல்பட்டு சிறை, பூந்தமல்லி கிளைச் சிறை ஆகியவற்றிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கும், அங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோய்த் தாக்கம் அதிகம் காணப்படும் கைதிகள் மட்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்த நிலையில் புழல் சிறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை அசோக்நகா் 6-ஆவது அவென்யூவைச் சோ்ந்த லி.ரவிக்கு (57) நோயின் தாக்கம் அதிகரித்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.