ஈரோடு: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஈரோட்டில், ஊரடங்கால் வேலை இழந்துள்ள கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, போக்குவரத்து தொழிற்சங்கம் முருகையா, எச்.எம்.எஸ்., தொழிற்சங்கம் சண்முகம் உட்பட பலர் பேசினர்.
கரோனாவுக்கான ஊரடங்கால் வேலை இழந்துள்ள கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த, பதிவு செய்யாத, புதுப்பிக்கத் தவறிய அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி, உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கான, 44 வகையான சட்டங்களை, நான்கு சட்டங்களாக குறைப்பதை கைவிட வேண்டும். எட்டு மணி நேர வேலையை, 12 மணி நேரம் என மாற்றக்கூடாது. கரோனா பெயரை கூறி, பாதுகாப்புத்துறை தொழிற்சாலை, நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல் நிறுவனம், அணு ஆற்றல், வங்கி, காப்பீடு நிறுவனம், ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது.
விவசாயம், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், மின் கட்டண சலுகை போன்றவற்றை பறிக்கக்கூடாது. மின்துறையை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுபோல, மாவட்ட அளவில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.