ஈரோடு: ஈரோட்டில் இன்று மாலை கனமழை பெய்ததால், சில நாள்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த ஈரோடு நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணி முதல் லேசான தூரல் விழுந்தது. இதைத்தொடர்ந்து இதமான காற்றுடன் இரவு 7 மணியை கடந்தும் மழை கொட்டியது.
இதனால் மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி சாலை, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி, மணிக்கூண்டு பகுதி, கொங்காலம்மன் கோவில் வீதிகள், ஆர்.கே.வி. சாலை, மூலப்பட்டறை பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஓடியது. மாலை 5 மணிக்கே கரும் மேகத்துடன் மழை பெய்ததால், அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி பயணித்தன. மாலை 6 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது.
கனமழை பெய்து, குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்தனர். மேலும், இந்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் கடந்த சில நாள்களாக ஈரோடு நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மழையால் மக்களிடையே நோய் பரவல் குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.