கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஆற்றங்கரையில் வெள்ளிக்கிழமை இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ஆனைக்காரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் மகன் மோகன் (38). ஓட்டுநர். இவருக்கு திருமணமான சில ஆண்டுகளிலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மோகன் தனித்து வந்தார்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றங்கரையில் மோகன் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார். அவரது கால்கள் கட்டப்பட்டிருந்தது மட்டுமல்லாமல், தலையில் ரத்தக் காயங்களும் இருந்தன. அவரது ஆடைகள் களையப்பட்டு இருந்தது.
தகவலறிந்த பட்டீசுவரம் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று மோகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.