கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.
சீனாவில் உருவான கரோனா உலகம் முழுக்க உருவெடுத்து பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பலிவாங்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில், கரோனா தொற்று நோயால் இருவர் உயிரிழந்தனர். கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி, காந்தி தெருவைச் சேர்ந்த 55 வயது பெண்மணி, நாகங்குடி, அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 62 வயது முதியவர். இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தனர்.
உயிரிழந்த இவர்களது உடல்களை, தமுமுக திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் காட்டூர் பைசல் மூலம், பொதக்குடி மற்றும் கூத்தாநல்லூர் தமுமுக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதக்குடி பெண்மணியின் உடலை, பொதக்குடி பெரியப்பள்ளி வாயில், மையவாடியிலும், நாகங்குடி முதியவர் உடலை, நாகங்குடி பள்ளிவாயில் மையத்தான் கொள்ளையிலும் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இரு உடல்களையும், சுகாதார ஊழியர்களின் அறிவுரைப்படி, 10 அடி ஆழம், 7 அடி நீளம், 4 அடி அகலத்தில், அரை அடிக்கு மணல் கலந்த கிருமி நாசினி (ப்ளீச்சிங் பவுடர்) நிரப்பப்பட்டு, அரை அடி அளவுக்கு உப்பு நிரப்பி, 6 பேர் கொண்ட குழுவினரால், போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பிரேதத்தை இறக்கப்பட்டன. தொடர்ந்து, பிரேதத்தின் மீது, மறுபடியும் கிருமி நாசினி, மணல் கலந்த கலவை மற்றும் உப்பு நிரப்பப்பட்டு, அதன் மேல் மண் மூலம் குழி முழுவதுமாக மூடப்பட்டு, அதன் மேல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இது குறித்து ஒருவர் கூறியது, ஒருவர் கரோனாவால் இறந்து விட்டார் என்றாலே, அருகில் யாரும் வர மறுக்கும் காலம் இது. அது போன்ற இந்த நேரத்தில், மனித நேயத்தோடு, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியினர், நல்லடக்கம் செய்யும் சேவையை செய்து வருகின்றனர். இதுவரை தமிழகம் முழுக்க, ஊரடங்கால் மற்றும் ஆதரவற்றோர் என இறந்த 185 க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்றார்.