திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கரோனா: பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வாய்ப்பில்லை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால்,
திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கரோனா: பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வாய்ப்பில்லை

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தும் வாய்ப்பு தற்போது இல்லை என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருமலை அன்னமய்ய பவனில் சனிக்கிழமை காலை அவசர அறங்காவலர் குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. கூட்ட நிறைவுக்குப் பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது. 'திருமலை ஏழுமலையான் தரிசனம் கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தரிசனம் தொடங்கப்பட்டு 25 நாட்கள் முடிந்துள்ளது. திருமலைக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை

இந்நிலையில் திருமலையில் பணிபுரியும் மேளவாத்தியக்காரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என 17 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. சோதிக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், அவர்களுக்கு பக்தர்களிடமிருந்து தொற்று பரவும் வாய்ப்பில்லை. அவர்கள் வசிக்கும் இடத்திலிருக்கும் தொடர்பால் தொற்று பரவியிருக்கிறது. அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 


இதுவரை தினசரி 12 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான தரிசித்து வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை தற்போதும் உயர்த்தும் எண்ணம் தேவஸ்தானத்திற்கு இல்லை.

அதனால் திருமலையில் பணிபுரியும் ஊழியர்களின் சுழற்சி முறையை ஒரு வாரத்திலிருந்து 2 வாரங்களாக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. ஊழியர்கள் 2 வாரம் திருமலையில் தங்கியிருந்து பணிபுரிவர். மேலும் திருமலை தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்தில் தற்போது அனுமதிக்கப்பட்டு வருவதால், அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவ சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பக்தர்களின் பெயர், நட்சத்திரம்,கோத்திரம் உள்ளிட்டவற்றை பெற்று சங்கல்பம் செய்து உற்சவம் திருமலையில் ஏகாந்தமாக நடத்தப்படும். கல்யாண உற்சவம் ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களின் வீடுகளுக்கு கல்யாண உற்சவ பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது தொடங்கும் நாள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

கர்நாடக சத்திரம்
திருமலையில் கர்நாடக மாநிலத்திற்கு 7.5 ஏக்கர் நிலம் குத்தகை முறையில் ஒதுக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக இதில் நிலவி வந்த பிரச்சனை தற்போது சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இதற்காக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், செயல் அதிகாரிகள் நேரடியாக கர்நாடகாவிற்கு சென்று முதல்வர் எடியூரப்பாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. அதன்படி கர்நாடக மாநிலம் 7.5 ஏக்கர் நிலத்தில் ஓய்வறைகள், கல்யாண மண்டபங்கள் கட்ட ரூ200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 

பெட்டிங் முறை
திருமலையில் உள்ள தனியார் நன்கொடையுடன் கட்டப்படும் விருந்தினர் மாளிகை அனுமதி இனி அனைவரும் அறியும் வண்ணம் பெட்டிங் முறையில் அளிக்கப்படும். அதிக அளவில் நன்கொடை வழங்குபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. 

வேண்டுகோள்
வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அம்மாநில அனுமதியை முறையாக பெற்று பச்சை மண்டல பகுதிகளிலிருந்து மட்டுமே ஏழுமலையான் தரிசனத்திற்கு வர வேண்டும். திருமலைக்கு வரும் பக்தர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து, கிருமிநாசினி திரவங்களை பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொண்டு ஏழுமலையானை பக்தியுடன் தரிசித்து செல்ல வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது’. இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com