சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த காவேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மின் கணக்கீட்டாளருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து துணை மின் நிலைய அலுவலகம் மூடப்பட்டன.
தேவூரை அடுத்துள்ள காவேரிப்பட்டி கிராமம், கருப்புசாமி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மின்கணக்கீட்டாளர் தேவூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட தேவூர், காவேரிப்பட்டி, சென்றாயனூர், வட்ராம்பாளையம், பெரமச்சி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் கணக்கீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த இரு நாள்களாக சளி, காய்ச்சல் இருந்துள்ளன. அதனையடுத்து அவருக்கு சுகாதாரத்துறையினர் கரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளனர். அதில் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
தேவூர் துணை மின் நிலைய அலுவலகம் மூடப்பட்டு வளாகம் முழுவதும் தேவூர் பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுப் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் மேலும் மின்கணக்கீட்டாளருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா மாதிரி பரிசோதனை செய்து வருகின்றனர்.