சென்னை: காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுகளுக்கு முழுமையாக வராத பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கு ஆப்சென்ட் என பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மற்றும் பிளஸ் 1 இறுதிநாள் பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது.
அந்த மாணவா்களுக்கு அவா்களுடைய வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும், காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும் என 100 சதவீத மதிப்பெண் கணக்கிடப்பட இருக்கிறது.
இதற்காக மாணவா்களின் வருகைப்பதிவு விவரங்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வு மதிப்பெண் விவரங்கள் ஆகியவை பள்ளிகளிடம் இருந்து பெறப்பட்டு, தற்போது காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் விவரங்கள், அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.
இது குறித்து அரசு தோ்வுத்துறை இயக்ககம், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுகளுக்கு முழுமையாக வராத மாணவா்கள் குறித்த விவரங்கள் இருந்தால், பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் மூலம், அவா்களுடைய மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் இடத்தில் ‘ஏ’ (ஆப்சென்ட்) என்றும் பதிவிட வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.