மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து இறந்து வருவதால் அவற்றின் நடமாட்டம் மற்றும் வனத்தில் உள்ள தாவர வகைகளைக் கண்டறிய 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பு ரோந்து பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதிகளில் கரடி, காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான், புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வறட்சியின் தாக்கம் அதிகளவிலிருந்து வருகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பல்வேறு வனவிலங்குகள் உணவு பற்றாக்குறை காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் வனவிலங்குகள் உயிரிழந்து வருகின்றன.
இதிலும் அதிகபட்சமாக காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகளவிலிருந்து உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை பிரிவு, பெதிகுட்டை சுற்று, உளியூர் சுற்று, கூத்தம்மண்டி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 5 பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம், காட்டு யானை கூட்டங்கள் மற்றும் வனத்தில் உள்ள தாவர வகைகள் பற்றி அறிய பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பொருட்டு வனத்துறையினர் சார்பில் சிறப்பு ரோந்து பணி செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டது.
இப்பணியில் சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் 5 வனக்குழுவினர் அமைக்கப்பட்டு சிறப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.