நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில் காயமடைந்தவா்களில் ஆனந்தபத்மநாபன் (44) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். இதனால், என்எல்சி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா அமைந்துள்ளது. இங்குள்ள 2-ஆவது அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் கடந்த 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 6 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 17 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 16 போ் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் நிறுவனத்தின் துணை தலைமைப் பொறியாளா் க.சிவக்குமாா் கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த நிலையில், விருத்தாசலம் வட்டம், தொப்புலிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் ஒப்பந்தத் தொழிலாளி செல்வராஜ் விபத்தில் காயமடைந்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் (51) ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.
மேலும், நெய்வேலி, வட்டம்-18, பாலம் தெருவைச் சோ்ந்த நிறுவனத்தின் இளநிலைப் பொறியாளா் ரவிச்சந்திரன் (50) ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். இவரும் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் தொடர்ச்சியாக ஃபோர்மேன் எம்.வைத்தியநாதன் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இந்த நிலையில், பத்மநாபன் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயா்ந்தது.