சென்னை: இணையவழி வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வருகிற 15-ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இணையவழி வகுப்புகளுக்குத் இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்கள் இணையவழியில் நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் முயற்சிக்கும் போது ஆபாச இணையதளங்களால் அவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படுகிறது. எனவே, முறையான விதிகளை வகுக்கும் வரை இணையவழியில் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இணையவழி வகுப்புகளில் செல்லிடப்பேசி, மடிக் கணினி வாயிலாக பங்கேற்பதால், மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை இணையவழி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, விமல்மோகன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் மாணவர்களுக்குக் கண் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அரசு கண் மருத்துவமனை தலைவர் அறிக்கை அளிக்க ஏற்கெனவே நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரபாகரன், வழக்குரைஞர் ஜே. ரவீந்திரன் ஆகியோர், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி அரசு கண் மருத்துவமனை தலைவர் இதுவரை எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர். சங்கரநாராயணன், இணையவழி வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வருகிற 15-ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளது. அதனால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, விசாரணையை வரும் ஜூலை 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், அதுவரை இணையவழி வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இணையவழி வகுப்புகளுக்குத் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.