சென்னை: இளம் வழக்குரைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வழக்குரைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது கரோனா தொற்று. இதன் பரவலைத் தடுக்க பொது மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்படுகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதஇறுதி வாரம் தொடங்கி இம்மாத இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடும் பல்வேறு இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உள்பட தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் கடந்த நூறு நாள்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன. அவசர வழக்குகள் மட்டுமே காணொலி முறையில் விசாரிக்கப்படுகின்றன. நீதிமன்றங்களில் நேரடியாக விசாரணை நடைபெறாததால் வழக்குரைஞர்கள் குறிப்பாக இளம் வழக்குரைஞர்கள் வருவாய் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கவும், நீதிமன்றங்களைத் திறந்து நேரடியாக விசாரணை நடத்தவும் கோரி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் பொது முடக்கத்தால் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட 12 ஆயிரத்து 251 இளம் வழக்குரைஞர்களுக்கு நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் ஆகியோர் பங்களிப்புடன் தலா ரூ.4,000 நிதி உதவியை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் வழங்கியது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு, மூத்த வழக்குரைஞர்கள், இளம் வழக்குரைஞர்கள் மற்றும் பெண் வழக்குரைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியது:
சட்டக் கல்லூரிகளில் படித்து முடித்தவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் (புரவிஷனல் சர்டிபிகேட்) பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாகப் பதிவு செய்வர். இந்தப் பதிவு முடிந்ததிலிருந்து அவர்கள் வழக்குரைஞர்களாகின்றனர். இந்த நடைமுறை கடந்த 2010- ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் வழக்குரைஞர்களாகப் பதிவு செய்பவர்கள், அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாற்றப்பட்டது. 6 மாதங்களுக்கு ஒருமுறை இத்தேர்வு நடைபெறும். ஒவ்வொரு வழக்குரைஞருக்கும் 4 வாய்ப்புகள் தரப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்குரைஞர் பதிவு ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்று 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 65 ஆயிரம் பேர் அகில இந்திய பார் கவுன்சிலின் 2015-ஆம் ஆண்டு விதிகளின்படி சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். எஞ்சிய 45 ஆயிரம் பேர் பெரு வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் ஆலோசகர்களாக பணியாற்றுகின்றனர்.
ஓராண்டில் தமிழ்நாட்டில் படித்த 2-3 ஆயிரம் பேர், வெளி மாநிலங்களில் படித்த 2 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 5 ஆயிரம் பேர் வழக்குரைஞர்களாகப் பதிவு செய்கின்றனர். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவித்துள்ள இளம் வழக்குரைஞர்களுக்கான உதவித்தொகை அறிவிப்புக்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சருக்கு நன்றி கூறுகிறோம். கரோனா காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உதவித் தொகை அறிவிப்பு இளம் வழக்குரைஞர்கள் தங்களது சட்டத்திறனை மேம்படுத்த பெரிய உதவியாக இருக்கும் என்றார் அவர்.
இளம் வழக்குரைஞர் ஆர்.சந்தோஷ் (MS- 892/2018):
புனிதமான தொழிலாக கருதப்படும் வழக்குரைஞர் தொழில் நீதியை நிலை நாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இளம் வழக்குரைஞர்களின் ஆரம்பக் காலகட்டம், மூத்த வழக்குரைஞர்களையே நம்பியே இருக்கும். அவர்களிடம் ஜூனியராக பணியாற்றும் போது தான் நீதிமன்ற நடைமுறைகளை நாங்கள் நேரடியாக கற்றுக் கொள்ள முடியும். இதுபோன்ற சூழலில் அதிகபட்சம் மூத்த வழக்குரைஞர்களிடம் ரூ.5 ஆயிரம் வரை மாத வருவாயாக கிடைக்கும். அந்த தொகையில் எங்களது போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட பிற தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். கரோனா நோய்த் தொற்றால் நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள உதவித்தொகை எங்களுக்கு பேருதவியாக இருக்கும். இதற்காக தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் வழக்குரைஞர் ஜெ.லாவண்யா (MS- 494/2018) :
நீதிமன்றங்களில் நேரடி விசாரணைகளின்போது இளம் வழக்குரைஞர்களுக்கு ஏதாவது சிறு சிறு பணிகள் கிடைக்கும். குறிப்பாக வழக்குத் தாக்கல் செய்தல், டிராஃப்டிங், உத்தரவுகளை எடுத்து வருதல், மூத்த வழக்குரைஞர் ஆஜராக முடியாத சமயங்களில் கால அவகாசம் கோருதல் உள்ளிட்ட பணிகள் இருக்கும். சில சமயம் நண்பர்கள் மூலம் இதுபோன்ற பணிகள் கிடைக்கும். அதன் மூலம் ரூ.100 - ரூ.200 வருமானமும் கிடைக்கும்.
ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக எந்தப் பணியும் இல்லை, வருமானமும் இல்லை. இந்நிலையில் தமிழக அரசின் இந்த உதவித்தொகை எங்களது குடும்பத்தின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவிகரமாக இருக்கும். இதற்காக தொடர்ந்து முயற்சித்த தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.
அரசாணையில் கூறப்பட்டுள்ள தகுதிகள்
வழக்குரைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் போது அடிப்படைத் தகுதிகள் குறித்த அம்சங்களை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
1. விண்ணப்பதாரர்கள் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
2. அரசு சட்டக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும்
3. தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்}அகில இந்திய பார்கவுன்சிலின் தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம்
4. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்குரைஞர் தொழில் பயிற்சி செய்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞரிடம் இருந்து கடிதம் பெற்று அதைச் சமர்ப்பிக்க வேண்டும்
5. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
6. இரு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 பெற தகுதியானவர்கள்
7. ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்
8. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
9. விண்ணப்பதாரர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
10. இந்த உதவித்தொகை ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இளம் வழக்குரைஞர்களுக்கான தமிழக அரசின் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் http://ams.bctnpy.com என்ற தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.