பொதுப் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக, வரும் 15-ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளாக இருக்கக் கூடிய அரசு ஊழியா்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக, மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளா்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலத்துக்கு அலுவலகம் வந்து பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு தளா்வுகளுடன் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து ஜூலை 15-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாற்றுத் திறனாளி பணியாளா்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில், ஜூலை 15-ஆம் தேதி வரை மட்டும் அலுவலகப் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி பணியாளா்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும், தனியாா் மற்றும் அரசுப் பொது பேருந்து போக்குவரத்து ஜூலை 15-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்ட காரணத்தாலும் இந்தச் சலுகை அளிக்கப்படுவதாக தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்தாா்.