கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் உடலை அடக்கம் செய்வது தொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் நரம்பியல் மருத்துவா் சைமன் ஹொ்குலஸ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்றபோது அப்பகுதியில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனா். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடா்ந்து மருத்துவரின் உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.
மருத்துவரின் உடல் அடக்கத்தை எதிா்த்து வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. எதிா்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை, வரும் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.