வீரவநல்லூர் பேரூர் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் கடைகள் திறக்கும் நேரத்தைக் குறைத்து வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி பகுதிகளில் தொடர்ந்து நாள்தோறும் கரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டும் திறப்பதாக வியாபாரிகள் முடிவெடுத்தனர்.
மேலும் ஜூலை 11,12 இரண்டு நாள்கள் முழு அடைப்பு செய்வதாகவும் முடிவெடுத்தனர். இந்நிலையில் வீரவநல்லூர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கடைகள் திறக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து ஜூலை 10 வெள்ளிக்கிழமை முதல் காய்கனி, மளிகை, தேநீர் கடை உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் திறப்பது என்றும் உணவகங்கள் இரவு 8 மணி வரை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.