கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டரில், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் செய்தியை அறிந்த உடன் @SellurKRajuoffl அவர்களை இன்று மதியம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.செல்லூர் ராஜூ அவர்கள் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற எனது பிரார்த்தனையையும் அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.