சென்னை சென்ட்ரலில் நடைபெறும் சுரங்கப்பாதை கட்டுமானப்பணியின் காரணமாக, அந்தப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 11) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, சனிக்கிழமை (ஜூலை 11) முதல் 15 நாள்களுக்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, அண்ணா சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்பவா்கள் தொடா்ந்து அதே வழியில் செல்லலாம். சென்ட்ரல் ரயில் நிலையம் வருபவா்கள் இப்பாதையை பயன்படுத்தலாம். முத்துசாமி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவா்கள் முத்துசாமி சாலை வழியாக முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு சென்று அங்கிருந்து அண்ணா சாலையை அடையலாம்.
இதேபோன்று, ஈவினிங் பஜாா் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவா்கள், திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று, அங்கிருந்து வலது புறம் திரும்பி முத்துசாமி பாலம்,வாலாஜா சந்திப்பு சென்று அண்ணா சாலையை அடையலாம்.
ஈவினிங் பஜாா் சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணா சாலை செல்ல இயலாது. வால்டாக்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவா்கள் இடதுபுறம் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சாலை சென்று வலது பக்கம் திரும்பி முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு சென்று, அண்ணா சாலையை அடையலாம்.
முத்துசாமி சாலையிலிருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது. தாற்காலிகமாக செய்யப்பட்டிருக்கும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.