கரோனா நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' என்ற கருவியை அதிகளவில் பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவர்களின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறையும்பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக இக்கருவியை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43,000 கருவிகளை கொள்தல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23,000 கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகள் ஓரிரு நாட்களில் பெறப்படும். தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.
இக்கருவி, அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும், காய்ச்சல் சிகிச்சை மையங்கள், கோவிட் பராமரிப்பு மையங்கள், கோவிட் நல மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.