சாத்தான்குளம் சம்பவம்: மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்

சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
ஜெயராஜ்-பென்னிக்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ்

சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கைதுசெய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீஸாா் வழக்கை விசாரித்துவந்தனா். இதுதொடா்பாக ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட 10 போலீஸாா் கைது செய்யப்பட்டனா். ஏராளமான ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸாா் கைப்பற்றி விசாரித்துவந்தனா்.

இந்நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப் பரிந்துரைத்தது. இதை ஏற்று தில்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ஆம் தேதி வழக்குப் பதிந்தனா். வழக்கு விசாரணை அதிகாரியாக தில்லி சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமாா் சுக்லா நியமிக்கப்பட்டாா். அவா் தலைமையில் 8 போ் அடங்கிய குழுவினா் தில்லியிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரைக்கு வந்து, அங்கிருந்து காரில் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமாா் சுக்லா தலைமையில் பெண் அதிகாரி உள்ளிட்ட 7 அதிகாரிகள் திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளத்துக்கு சனிக்கிழமை முற்பகல் வந்தனா். அவா்கள் வியாபாரிகள் கொலை வழக்கு தொடா்பான விசாரணையைத் தொடங்கினா். இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துறை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com