திருவாரூரில் நிகழ்ந்த கொலை வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை 6 பேர் சரணடைந்தனர்.
திருவாரூர் பெரிய மில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (35). இவர் ஆயுதங்களை வைத்து வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து ஜாமீனில் ஜூலை 7-ம் தேதி இரவு வெளியே வந்த இவர் 8-ம் தேதி ரயில்வே நிலையம் குட்ஷெட் பகுதியில் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திருவாரூர் பெரிய மில் தெருவைச் சேர்ந்த கே. மரகதவேலன் (27), டி. ராஜபாண்டியன் (33), கே. திலீபன்பதி (31), கே. பிரபாகரன் (33), பி. ஹசன் முகமது (30), ஆர். பிரசாந்த் (29) ஆகியோர் திங்கள்கிழமை பிற்பகல் சரணடைந்தனர். இவர்களை 15 நாள்கள் காவலில் வைக்குமாறு நடுவர் முகம்மது அலி உத்தரவிட்டார்.