சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவியைக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த சந்தியாகு மகன் ஜீவன் (30). இவர் லடாக் எல்லைப் பகுதியில் ராணவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முடுக்கூரணியில் உள்ள அவரது வீட்டில் அவரது தந்தை சந்தியாகு, தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா, ஏழு மாத பெண் குழந்தை ஆகிய நால்வரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் வசித்து வந்த வீட்டின் கதவு செவ்வாய்க்கிழமை காலை வெகு நேரமாகியும் திறக்கவில்லையாம். இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ராஜகுமாரி (60). அவரது மருமகள் சினேகா (28) ஆகிய இருவரும் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவலறிந்த ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகனன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் (பொறுப்பு) உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அதன்பின்னர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, உயிரிழந்த ராஜகுமாரி, சினேகா ஆகியோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.