டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி லாரி, வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டீசல் விலை உயர்வை கண்டித்தும், காலாண்டு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும், ஓட்டுனர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
திண்டிவனம் லாரி உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் ஆர்.முத்து தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கர் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கார் வேன் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தினர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் திண்டிவனம், விழுப்புரத்தில் லாரி கார் வேன்களை ஒருநாள் இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர்.