தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையைக் கம்பியால் தாக்கிக் கொலை செய்த மகனை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள சுக்காம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈசாக் (55). விவசாயி. இவருக்கும், இவரது மகன் அந்தோணி ஆனந்தரூபனுக்கும் (30) குடி பழக்கம் இருந்து வந்தது. வழக்கம்போல ஈசாக்கும் திங்கள்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, இவருக்கும், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அந்தோணி ஆனந்தரூபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஈசாக்கை அந்தோணி ஆனந்தரூபன் கம்பியால் தாக்கினாராம். பலத்தக் காயமடைந்த ஈசாக் மயங்கி விழுந்தார். மது மயக்கத்தில் இருப்பதாகக் குடும்பத்தினர் நினைத்து விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், செவ்வாய்க்கிழமை காலையும் எழுந்திருக்காத ஈசாக்கை சிலர் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் புகார் செய்தார். இதன் பேரில் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து அந்தோணி ஆனந்தரூபனை கைது செய்தனர்.