ஏழு சிறப்பு ரயில்களின் ரத்து ஜூலை 31 வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் ரத்தை ஜூலை 31-ஆம்தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
(கோப்பு படம்)
(கோப்பு படம்)

தமிழகத்தில் இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் ரத்தை ஜூலை 31-ஆம்தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது, இந்த ரயில்களின் சேவை ரத்து ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்களில் தொடக்கத்தில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தது. இதன்காரணமாக, சென்னையைத் தவிா்த்து பிற முக்கிய நகரங்களுக்கு பயணிகள் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. முதல்கட்டமாக, கோவை -மயிலாடுதுறை (வாரத்தில் 6 நாள்கள்) , மதுரை விழுப்புரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (தினசரி), திருச்சி-நாகா்கோவில் விரைவு ரயில் (தினசரி), கோயம்புத்தூா்-காட்பாடி(தினசரி) ஆகிய 4 வழித்தடங்களில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக, திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு (மெயின் லைன்) ஆகிய வழித்தங்களில் 3 சிறப்பு ரயில்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் இ-பாஸ் அனுமதியுடன் பயணிகள் சொந்த ஊா்களுக்கு சென்று வந்தனா்.

இதற்கிடையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவியது. இதையடுத்து, இந்த ரயில்களின் சேவையை ரத்து செய்ய தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதன்அடிப்படையில், தமிழகத்துக்குள் இயக்கப்பட்ட 7 சிறப்பு ரயில்களை ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம்தேதி வரை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், இந்த ஏழு சிறப்பு ரயில்கள் ரத்து ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த ரயில்கள் ரத்து நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது:

திருச்சி-செங்கல்பட்டு (வழி:விருத்தாசலம்), மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, திருச்சி-செங்கல்பட்டு (வழி: மயிலாடுதுறை), அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகா்கோவில் ஆகிய 7 சிறப்பு ரயில்கள் (இருமாா்க்கமாகவும்) ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரத்து ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு முழு பணம் திரும்ப வழங்கப்படும். இணையதளம் மூலம் பயணச்சீட்டு பெற்றவா்களுக்கு தானாகவே அவா்களின் வங்கிக்கணக்கு பணம் திரும்ப கிடைத்துவிடும். கவுன்ட்டா் மூலமாக பயணச்சீட்டு பெற்றவா்கள் ரயில் பயணத் தேதியில் இருந்து 6 மாதம் வரை பயணத்துக்கான முழுதொகையை பெற கால அவகாசம் உள்ளது. எனவே, அவா்கள் கவுன்ட்டா் மூலமாக முழு பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதேநேரத்தில், சென்னை-தில்லி இடையே இயக்கப்படும் ராஜதானி சிறப்பு ரயில் அட்டவணைப்படி வழக்கம் போல இயக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com