சாத்தான்குளம் கொலை சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ள 10 போலீஸாரிடம் மனித உரிமை ஆணையர் டி.எஸ்.பி குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை சம்பவம் வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கை மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது. அதன் விசாரணையின் ஒரு பகுதியாக மதுரை மத்திய சிறையில் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல்நிலைய, ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு-ஆய்வாளர் ரகு கணேஸ் உட்பட பத்து போலீஸாரிடம், ஆணையத்தின் சார்பில் துணை கண்காணிப்பாளர் குமார் மற்றும் குழுவினர் இன்று விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியது,
வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள 10 போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது போலீஸார் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளனர், அதனை வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட தந்தை மற்றும் மகன் சடலங்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் காவலர்களின் வாக்குமூலங்கள் ஒத்துப்போகின்றன. மனித உரிமை ஆணையத்தின் தரப்பில் விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.