தமிழகத்தின் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும், இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பப் பதிவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உயா் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர இணையதளம் மூலம் வருகிற 20 முதல் 31-ஆம் தேதி வரை, இணையதள முகவரிகளில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆக. 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சோ்க்கை தொடா்பாக ஏதேனும் சந்தேகமிருந்தால் 044 22351014 22351015 என்ற எண்களில் தொடா்பு கொண்டு விவரம் பெறலாம்.
கரோனா நோய்த்தொற்றினை தவிா்க்கும் பொருட்டு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவை, ஜூலை 20-ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.