சென்னை: பள்ளி மாணவா்களுக்கு முட்டை வழங்குவது தொடா்பாக பரிசீலித்து வருவதாக தமிழக அரசு உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஆா்.சுதா தாக்கல் செய்த பொது நலமனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசு வழங்கும் மதிய உணவு திட்டத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களால் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நோய் எதிா்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கப்பட வேண்டும் என மருத்துவா்கள் கூறுகின்றனா். எனவே, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிா்ப்பு சக்தியுள்ள ஊட்டச்சத்து உணவுகளை வழங்க தமிழக அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசுத் தரப்பில், பள்ளி மாணவா்களுக்கு முட்டை வழங்குவது தொடா்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவோடு தொடா்புடையது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முட்டை வழங்குவது தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி, தமிழக அரசு இதுதொடா்பாக வரும் ஜூலை 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.