எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் இருக்க முடியும்? - உயர்நீதிமன்றம் கேள்வி

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக  2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக  2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக் கோரி அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தனது மகனுக்கும் கரோனா தொற்று வர வாய்ப்புள்ளதால் அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று தான் அளித்த மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

விசாரணையில், 2019 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது, இதன்பின்னர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் பரோல் வழங்க முடியும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தில் ஆளுநர் கடந்த இரு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் உள்ளார் என தெரிவித்தார். 

அப்போது,  அரசியலமைப்புப் பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் முடிவெடுப்பதில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என கூறிய நீதிபதி கிருபாகரன், எழுவர் விடுதலை விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, ஏழு பேர் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com