விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரு வயதுக் குழந்தையைக் கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியைச் சேர்ந்தவர் திருக்குமரன் (27). இவருக்குத் திருமணமாகி மகாலட்சுமி்(23) எனும் மனைவியும், ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இதனிடையே கணவர் திருக்குமரனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை நண்பகல் வேளையில் மகாலட்சுமி தனது மாமனாரான முருகேசனை வெளியில் அனுப்பி விட்டு வீட்டிற்குள் உட்புறமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மாமனார் முருகேசன் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியே பார்த்த போது உள்ளே மகாலட்சுமி தூக்கில் தொங்குவதைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி வெங்கடேசன், நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல் துறையினர் மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றினர்.அத்துடன் குழந்தையைத் தேடிய போது மாடியில் உள்ள பிளாஸ்டிக் நீர்த்தொட்டியினுள் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய் தனது ஒரு வயதேயான பச்சிளம் குழந்தையைக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.