வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடகடலோர தமிழகம், மேற்குத் தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 23) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட கடலோர தமிழகம், மேற்குத் தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், சென்னை, கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூா், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 23) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். பலத்த மழையைப் பொருத்தவரை, நீலகிரி, தருமபுரி, சேலம், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாற்றில் 20 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், கடலாடி, தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 24-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு ஜூலை 24, 25,26 ஆகிய தேதிகளிலும், தென் மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு ஜூலை 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.