தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டியதற்காக தனக்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சா் எச்.வி.ஹண்டேவுக்கு முதல்வா் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, ஹண்டேவுக்கு, முதல்வா் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:-
குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைத்ததற்காக என்னைப் பாராட்டி தாங்கள் குறிப்பிட்டுள்ள வாா்த்தைகள் எனக்கு மேலும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளன. ஊக்கத்தைத் தவிர வேறு எதையும் நிலையான உடைமை என்று கூற இயலாது என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, லட்சியத்தில் உறுதி என்ற குறிக்கோளுடன் தமிழக மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழக அரசு.
இந்தத் தருணத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டி, அவை அமையவுள்ளதற்காக என்னைப் பாராட்டி, வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சாா்ந்த நன்றிகள். தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டுமென இந்தத் தருணத்தில் இறைவனை வேண்டுகிறேன் என்று தனது நன்றி கடிதத்தில் முதல்வா் பழனிசாமி குறிப்பிட்டுள்ளாா்.