கடகம் கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிரமப்படுவதால் புதிய கான்கிரீட் பாலம் கட்டித் தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், காளியாக்குடி ஊராட்சியைச் சேர்ந்தது கடகம் கிராமம். இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு குறுக்கேச் செல்லும் நாட்டாறைக் கடந்து கொல்லுமாங்குடி காரைக்கால் நெடுஞ்சாலையில் உள்ள பழையாறு என்ற கிராமத்திற்கு வர வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த நாட்டாற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மூங்கில் பாலம் தான் உள்ளது. மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த பாலத்தில் தான் கடகம் கிராம மக்கள் தினசரி ஆற்றைக் கடந்து தங்களது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
நாட்டாற்றில் தண்ணீர் வராத காலங்களில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி வருகிறார்கள். ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் சேதமடைந்த பாலத்தையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் மரப்பாலத்தை எடுத்துவிட்டு, கான்கிரீட் பாலம் கட்டித் தரக்கோரி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் புதிய கான்கிரீட் பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லையென்றால அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.