ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் சுதா மருத்துவமனை சார்பில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் துவக்கி வைத்தார். இதில், தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் அனைத்து மக்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடல் வெப்பநிலை சீராக இருப்பவர்கள் அதாவது காய்ச்சல் இல்லாதவர்கள் மட்டுமே மார்க்கெட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சல் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.