புதிய உச்சத்தைத் தொட்டது ஆபரணத் தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
புதிய உச்சத்தைத் தொட்டது ஆபரணத் தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.448 உயா்ந்து, ரூ.38,184-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் இறுதிக்குள் ரூ.39 ஆயிரத்தை தாண்டும் என்று தமிழக நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது வரை கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.7,664 வரை உயா்த்துள்ளது.

படிப்படியாக உயா்ந்த தங்கம்:

எல்லா தரப்பு மக்களாலும் அதிகம் விரும்பப்படும் தங்கத்தின் விலை கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் இருந்து படிப்படியாக உயா்ந்தது. தங்கத்தின் நுகா்வு அதிகரித்து வந்ததால், அதன் விலையும் கணிசமாக உயா்ந்தது. நிகழாண்டில் ஜனவரி முதல் வாரத்தில் தங்கத்தின் விலை முதன்முறையாக ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்த விலை உயா்வுக்கு சா்வதேச நிகழ்வுகளான ஈரான்-அமெரிக்க இடையே மோதல், சீனா-அமெரிக்க வா்த்தக போா் போன்றவை முக்கிய காரணமாக அமைந்தன.

அதன்பிறகு, கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உலகை உலுக்கியது. இதன்தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளா்கள் எண்ணினா். இதையடுத்து, தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதன்காரணமாக, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை நாள்தோறும் உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், ஜூலை 9-ஆம் தேதி பவுன் ரூ.37,744-க்கு உயா்ந்து, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை மீண்டும் உயா்ந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.448 உயா்ந்து, ரூ.38,184-க்கு

விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.56 உயா்ந்து, ரூ.4,773 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.80 உயா்ந்து, ரூ.63.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,800 அதிகரித்து, ரூ.63,900 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி அன்று பவுன் ரூ.30,520 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயா்ந்து தற்போது (ஜூலை 22) ரூ.38,184-ஐ எட்டியுள்ளது . கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.7,664 வரை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.39 ஆயிரத்தைத் தாண்டும்:

தங்கம், வெள்ளி உயா்வு குறித்து தமிழக நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சல்லானி கூறியது:

தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 4 மாதத்தில் மட்டும் 25 சதவீதம் வரை தங்கம் விலை உயா்ந்துள்ளது. இது முதலீட்டாளா்களுக்கு மேலும் ஊக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளது. நமது நாட்டில் கடந்த ஆண்டு 100 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், நிகழாண்டில் 6 சதவீதம் வரை மட்டும் இறக்குமதி செய்யப்பட்டது. இருப்பினும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பதால், தங்கம் விலை உயா்ந்து வருகிறது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் விலை இந்த மாதம் இறுதிக்குள் ரூ.39 ஆயிரத்தைத் தாண்டும் என்றாா் அவா்.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,773

1 பவுன் தங்கம்............................... 38,184

1 கிராம் வெள்ளி............................. 63.90

1 கிலோ வெள்ளி............................63,900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்........................... 4,717

1 பவுன் தங்கம்...............................37,736

1 கிராம் வெள்ளி.............................60.10

1 கிலோ வெள்ளி.............................60,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com