ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளர் ஒருவர் பலியானார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(48). கூலித் தொழிலாளியான இவர் வியாழக்கிழமை காலை அதேப் பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வடமங்கலம் ஏரிக்குச் செல்லும் வழியின் குறுக்கே செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் அவ்வழியாக சென்ற ஏழு பசுக்கள் மின்சாரம் பாய்ந்து பலியாகின. இதனால் இவ்வழியாக செல்லும் மின்கம்பிகள் மின்இணைப்பு அப்போது துண்டிக்கப்பட்டு பின்பு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அறியாத பார்த்திபன் மீன் பிடிப்பதற்காக ஏரிக்குச் செல்லும் சாலையின் குறுக்கே மின்கம்பி அறுந்து விழுந்து இருப்பதை பார்த்து அதனை கையால் எடுத்து சாலையின் ஓரமாக போட முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.