புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-இன் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்." என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
முன்னதாக, புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச் சாலை வில்லியனூர் பகுதி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் இன்று (வியாழக்கிழமை) காவித் துண்டு அணிவித்தனர். இதையடுத்து, அதிமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்ஜிஆர் சிலையை அவமதித்தது மட்டுமின்றி, பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.